ஆசிய விளையாட்டு போட்டி ; இலங்கை வென்ற பதக்கம் பறிபோனது

7 months ago
SPORTS
aivarree.com

ஆசிய விளையாட்டு நிகழ்வில் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியானது தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 23 ஆம் திகதி சீனாவின் ஹங்சேவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் இறுதிப் போட்டி திங்கட்கிழமை (02) நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம், 14.25 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தை பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றது.

கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன, அருன தர்ஷன சிங்கபுரகே, நதீஷா ராமநாயக்க மற்றும் கலிங்க குமாரகே ஆகியோர் பங்கெடுத்தனர்.

எனினும், பின்னர் இலங்கை அணியானது TR 17.3.1 விதியை மீறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இலங்கை போட்டியாளர்களில் ஒருவர் தடம் மாறி ஓடியமை கண்டறியப்பட்ட நிலையில் இந்த தகுதி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

இதனால் இலங்கை அணி வென்ற வெள்ளிப் பதக்கம் பறிபோயுள்ளது.

இதையடுத்து போட்டியில், மூன்றாவது இடம்பிடித்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட, நான்காம் இடம்பிடித்த கஜகஸ்தானுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இப்போட்டியில் பஹ்ரைன் வீரர்கள் 3:14.02 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.