பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜகுமாரி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரி இன்று நுவரெலியா, கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை பகுதிகளில் உள்ள தோட்டங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது குடும்ப பொருளாதார சுமையை சுமந்து கொண்டு பதுளையில் இருந்து கொழும்பில் நடிகை சுதர்மா நித்திகுமாரியின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்த இந்த இளம் தாய் மீது திருட்டு குற்றம் சுமத்தி பொலிஸ் முறைப்பாடு செய்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணையில் மரணமடைந்துள்ளார்.
இவரின் மரணம் மர்மமான, நியாயமற்றது எனவே இந்த இளம் தாயின் நியாயமற்ற மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்த மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளையும் முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.