கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வாழைப்பழம் ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட பின்னரே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியில் விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய அமைய அமைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையில் பதனிடப்படுகின்ற கதலி வாழைப்பழங்கள் டுபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 250 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளதுடன் கதலி வாழைப்பழத்திற்கு நியாயமான விலையையும் யாழ்ப்பாண விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் இத்திட்டத்தின் மூலம் ஏற்றுமதியினை விஸ்தரித்து நேரடியாக பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையை 700 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.