ஏப்ரலில் மீண்டும் பாரிய போராட்டம் | இன்று இறுதி முடிவு

1 year ago
Sri Lanka
aivarree.com

அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் மாதம் மீண்டும் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வரிக்கொள்கையை மாற்றுதல், மின்சார கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ஜனாதிபதி சில விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில் அவர்களது கோரிக்கைகளுக்கு பதிலனுப்பியமையால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும் அந்த விடயங்கள் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், அதுகுறித்து தொழில் வல்லுனர்களின் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய போதும், அதற்கும் பதில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மீண்டும் நாடுதழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்றையதினம் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.