இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்கு செல்கிறது.
இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில் சீனா அதிக முக்கியத்துவம் அளித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு உதவுவதற்காக சாதகமான பங்கை வகிக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் என்பன சீனாவுடன் இணைந்து செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கும், அதன் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடரும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.