உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சார தடையை ஏற்படுத்துவதில்லை என்ற இணக்கப்பாடு நேற்று ஏற்பட்டிருந்தது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு, எரிபொருள் கூட்டுத்தாபனம் போன்றவற்றின் அதிகாரிகளுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த இணக்கம் காணப்பட்டது.
எனினும் இந்த இணக்கப்பாட்டை மீறி இன்று பல இடங்களில் 1 மணித்தியாலத்துக்கும் மேல் மின்சார விநியோகத் தடையை இலங்கை மின்சார சபை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மின்தடையை ஏற்படுத்துவதில்லை என்ற உறுதிப்பாட்டை மீறி செயற்பட்டால், பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மின்சார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.