தங்காலை, குடுவெல்ல பகுதியில் இடியாப்பக் கொத்து தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தந்தையும், மகனும் வாள்வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயங்களுக்குள்ளான 24 வயதுடைய மகன் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் 61 வயதுடைய அவரின் தந்தையும் வெட்டுக் காயங்களுடன் நகுலுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த குழுவொன்றே இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
- தாக்குதலுக்கு உள்ளானவர்களின் உறவினர் ஒருவர் வீட்டில் இடியாப்பம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- குறித்த வீட்டிற்கு மதுபோதையில் வந்த குழுவினர், அங்கிருந்த தாக்குதலுக்குள்ளான இளைஞனை இடியப்ப கொத்து கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.
- இதன்போது அந்த இளைஞன், தனது அத்தை இடியப்ப கொத்து செய்வதில்லை, இடியப்பம்தான் செய்கிறார் என்று கூறியுள்ளார்.
- இதனையடுத்து குறித்த இளைஞனுடன், அவரின் தந்தையுடனும் மதுபோதையில் இருந்த குழுவினர் மேற்கொண்ட வாக்குவாதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.