ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்று காலை 5 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புத்தளம் பாதையூடான ஒரு ரயில் சேவையும், களனிவெளி பாதையூடான 2 ரயில் சேவைகளும், குருணாகல் மற்றும் மொரட்டுவையிலிருந்து கொழும்பு, கோட்டை வரை செல்லும் 2 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு – பதுளைக்கு இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையும் இன்றைய தினம் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று (9) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் பதவி உயர்வினை கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.