பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த காரை நகர் தாதா என அழைக்கப்படும் கயன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது இன்று காலை யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி காரை நகர் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் 8 கிலோ கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய முற்பட்டபோது, விசேட அதிரடிப்படையினரை தாக்கிவிட்டு இவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு எதிராக ஏற்கனவே மல்லாகம், ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதோடு பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதற்காக இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
கைதான குறித்த நபரிடமிருந்து போலியான கடவுச்சீட்டுகள் இரண்டும் கைத்தொலைபேசிகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.