ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு தகவலை பகிரங்கப்படுத்திய பந்துல

12 months ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அத்துடன் பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பில் சில புலனாய்வு தகவல்கள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இனக்கலவரங்கள் மற்றும் ஏனைய பயங்கரவாதச் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்ற வகையில், வன்முறையைத் தூண்டும் நபர்களைத் தடுப்பதற்கு கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கருதுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ்வதற்கான அமைதியான சூழலை உறுதி செய்வதற்கு தேவையான உத்தரவுகளை அரச தலைவரினால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த தகவல் நேற்று (29) Vikey News யூடியூப் செனலில் வெளியாக்கப்பட்ட காணொளியில் முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.