ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
ஜூலை 20 மற்றும் 30ஆம் திகதிகளுக்கு இடையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர் பதவியில் உள்ள அரசாங்க வட்டாரத்தை மேற்கோள்காட்டி தி சண்டேமோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
விக்கிரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்காக ஜூலை 21 ஆம் திகதி தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
பெரும்பாலான இலங்கை ஜனாதிபதிகள் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வது வழமையான நடைமுறையாக இருந்தாலும், இந்தியா உத்தியோகபூர்வமாக அவருக்கு அழைப்பு விடுக்கும் வரை விக்கிரமசிங்கவினால் விஜயம் செய்ய முடியவில்லை.
எவ்வாறாயினும், சுவாரஸ்யமாக, இந்த ஒக்டோபரில் சீனாவில் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (பிஆர்ஐ) மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சீனாவிடம் இருந்து விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு வந்ததை அடுத்து, அவரது இந்தியப் பயணத்திற்கான திகதிகளை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.