இலங்கையின் பொருளாதாரம் முன்னறிவிக்கப்பட்ட அளவை விட வேகமாக மீண்டு வருகிறது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணவீக்கம் குறைதல், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் உலகளாவிய விலைகள் ஆகியவற்றின் காரணமாக கொள்கை விகிதங்களை 250 அடிப்படை புள்ளிகளால் குறைக்க வழிவகுத்தது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நாணயக் கொள்கை மறுமலர்ச்சி செய்தியாளர் மாநாட்டில் நேற்று (1) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கைப் பொருளாதாரம் ‘கணிக்கப்பட்டதை விட மிகவும் முன்னதாகவே’ வழமைக்குத் திரும்பி வருவதாகவும், பொருளாதாரம் ஸ்திரப்படுத்தல் கட்டத்தில் இருந்து மீட்சிக் கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் கூறினார்.
மீட்சியை மேலும் ஆதரிப்பதற்காக, மத்திய வங்கியானது கொள்கை விகிதங்களை 250 அடிப்படை புள்ளிகளால் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 13.00 வீதம் மற்றும் 14.00 வீதமாகக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
2023 ஜூலை இறுதிக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை எட்டக்கூடிய தெளிவான பணவீக்கப் பாதை தற்போது காணப்படுவதாகவும், கணிப்பீடுகளை விட மிக முன்னதாகவே இலக்கு வரம்பை அடையும் என்றும் அவர் கூறினார்.
நாணய மதிப்பு அதிகரிப்பு, எரிபொருள் மற்றும் பெற்றோலிய விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உலகளாவிய விலைகள் அனைத்தும் சாதகமான நிலைமைகளாகும்.
இது ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட மிகவும் முன்னதாகவே மீட்சியைக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உதவியதாக வீரசிங்க கூறினார்.
‘பண நிலைமைகளைத் தளர்த்துவதற்கான நேரம் இது என்று நாங்கள் நினைக்கிறோம், எனவே கொள்கை விகிதங்களின் இந்த வலுவான சரிசெய்தலை நாங்கள் தொடங்கினோம். வங்கிகள் இதன் அடிப்படையில் கடன் விகிதங்களைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக வணிகங்களுக்கு,’ என்றும் ஆளுநர் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், இதன் விளைவாக, வட்டி விகிதங்களின் வீழ்ச்சி படிப்படியாக வங்கிகளின் கடன் புத்தகங்களின் விரிவாக்கத்திற்கு பங்களிக்கத் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி மூலதன கணக்கு பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய வங்கி நிதி அமைச்சகத்திடம் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
தொழிற்சாலைகள், மூலப்பொருட்கள், இடைநிலை மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்த மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவாக முதல் கட்டமாக மூலப்பொருட்கள், உள்ளீட்டு இடைநிலைப் பொருட்கள் மற்றும் முதலீட்டு பொருட்கள் மீதான இறக்குமதி தடையை தளர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.