கல்விச் சுற்றுலாவுக்காக பாடசாலை மாணவர்களை அனுப்பும் போது கடைபிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை விதிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
நானுஓய – ரதெல்லையில் மாணவர் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த யோசனையை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.
பாடசாலை கல்விச் சுற்றுலாவுக்கு செல்ல பயன்படுத்துகின்ற பேருந்துக்கான அனுமதியை வலைய கல்விப் பணிமனையில் பெற வேண்டிய நடைமுறை தற்போதும் உள்ளது.
எனினும் இதில் புதிதாக 3 விடயங்களை உள்ளடக்க ராஜாங்க அமைச்சர் யோசனை முன்வைக்கவுள்ளார்.
அதன்படி பேருந்து பயணத்துக்கு ஏற்றதா? என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரச்சான்றிதழ், பேருந்தின் உள் மற்றும் வெளித்தோற்றங்களின் புகைப்படங்கள் மற்றும் பேருந்து சாரதியின் தகைமையை உறுதிபடுத்திய பேருந்து உரிமையாளரின் கடிதம் ஆகிய 4 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.