இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று (25) புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.
இது தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில நாட்களில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசியலமைப்பு பேரவைக்கு பிரதான எதிர்க்கட்சியல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், அதுகுறித்தும் புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
21ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டுள்ள நிலையில், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.