உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காகத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது.
அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பினை இன்று முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்ட போதிலும், காலவரையறையின்றி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு அறிவித்தது.
எவ்வாறெனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.