எரிபொருள் விநியோக பாதிப்பு | மீண்டும் வரிசை | அப்டேட்

11 months ago
Sri Lanka
aivarree.com

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் வரிசையும் அதிகரித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி எரிபொருள் விலை குறைக்கப்படும் என்ற செய்தி வெளியானதை அடுத்து, நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கொள்வனவு கட்டளையை இடவில்லை.

இதனால் விலை மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனைக்கு இருக்கவில்லை.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றாலும், தற்போது உருவாகியுள்ள இந்தத் தற்காலிக எரிபொருள் வரிசைகள் செயற்கையாக உருபாக்கப்பட்டவை என்பது புலனாகிறது.

இவ்வாறான நிலையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு நாளுக்குள்ளும் ஏனைய மாவட்டங்களில் இரண்டு நாட்களிலும் எரிபொருள் விநியோகம் சீரடையும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் கொழும்பிலும் கூட இன்னும் எரிபொருள் வரிசையை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த நிலைமை தொடர்கிறது.

இந்த நிலையில் வாரயிறுதி நாட்களிலும் எரிபொருள் விநியோகம் இடைவிடாது மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜசேகர அறிவித்திருந்தார்.

அந்த உத்தரவின் பிரகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

இதன்படி திங்கட்கிழமை ஆகும் போது நிலைமை சரிசெய்யப்பட்டுவிடுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மாதாமாதம் இந்த நிலைமை தொடர்வதை அவதானிக்க முடிகிறது.

விலை மாற்றம் நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கின்ற வர்த்தகர்கள், சுயலாபத்துக்காக செய்கின்ற தந்திரங்கள், பொதுமக்களை இவ்வாறு அசௌகரியப்படுத்துகிறது.

இந்த நிலைமையைத் தவிர்க்க உரிய பொறிமுறை ஒன்று அமுலாக்கப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.