சமூக செய்தி பரிமாற்று ஊடகமான வட்ஸ்எப், நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை வழங்கி புதிய அம்சங்களையும் சேர்த்து வருகிறது.
தற்போது இது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாகவும் மாறிவிட்டது.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வட்ஸ்எப் அண்மைய நாட்களில் பலருக்கு பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது.
வட்ஸ்எப்பின் எழுத்துருக்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் பச்சை நிறமாக மாறி இருப்பினும், இது முன்னறிவிக்கப்படாத ஒன்றாகும்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் அதிருப்தியை தெரிவித்து வருவதைக்கூட காணமுடிகிறது.
இதுதொடர்பாக வட்ஸ்எப் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் செய்தி தளங்களை ஆராய்ந்த போது, அதில் இது குறித்த எந்த விடயங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் வட்ஸ்எப் குறித்த தகவல்களை பரிமாறுகின்ற இணையத்தளங்கள் பலவற்றில், தெரிவு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மாத்திரம் இவ்வாறு பச்சை நிற எழுத்துருக்களை வட்ஸப் அமுலாக்கி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.