யாழ்ப்பாணம் – புத்தூர், கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன், அங்கிருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து, சமூக ஊடகங்களில் தவறாக வெளியிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரிலே குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இதன்போது காயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதை குறித்த குழுவினர் தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.