யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று, அவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
குறித்த பழக்கடை வியாபாரி பழம் வாங்கச் சென்ற பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
அதுதொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார்.
அதனால் தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.