13 அரச நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம்

12 months ago
Sri Lanka
aivarree.com

அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கோபா குழுவினால் 2023.03.23 ஆம் திகதி பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2023.03.23ஆம் ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கூடியபோது அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் திகதிகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்றை 2023.05.15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அறிவுறுத்தி பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதற்கு அமைய அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்காக கோபா குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தலைமையில் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் கூடியது.

இதற்கமைய பதின்மூன்று அரசாங்க நிறுவனங்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க விளக்கமளித்தார்.

இதில் கீழ்வரும் நிறுவனங்கள் 13ற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

  1. ஆட்பதிவுத் திணைக்களம்
  2. இலங்கை சுங்கம்
  3. ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
  4. கமநலத் திணைக்களம்
  5. இலங்கை தர நிர்ணய நிறுவனம்
  6. மோட்டார் வாகனத் திணைக்களம்
  7. மதுவரி திணைக்களம்
  8. உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  9. கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
  10. பதிவாளர் நாயகம் திணைக்களம்
  11. உணவுப் பாதுகாப்புப் பிரிவு, சுகாதார அமைச்சு
  12. கொழும்பு மாநகரசபை
  13. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு