தற்பொழுது, சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தின் அழகை வெளிநாட்டவர்களுக்குக் காணும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம் தினமொன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரக்கூடிய சிகிரியாவைச் சூழவுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், இந்தச் செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாகச் செய்வதற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க KOICA இணங்கியுள்ளதாகவும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தலைமையில் 2023.11.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாப் பிரதேசங்களில் முறைசாரா வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக கட்டணத்தை அறவிடுவதும் இங்கு புலப்பட்டது.
அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் குழுவில் வலியுறுத்தினர்.