சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

2 weeks ago
aivarree.com

நாட்டில் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த எண்ணிக்கையை ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்தநிலையை காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் முதல் மூன்று வாரங்களில் வருகை தந்துள்ளனர்.

நாளாந்த வருகை சராசரி 5,100 என்ற அளவில் குறைந்துள்ளதோடு, வாராந்தம் சராசரி வருகை 35,000 ஆக குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல என்றும் மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போக்குகளைப் பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் வரும் இரண்டு மாதங்களில் வேகம் மேலும் குறையும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 வீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

11 வீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 வீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.