பெருந்தோட்ட மக்களுக்கான கொடுப்பனவு குறித்து ஜனாதிபதியிடம் மனோ வலியுறுத்தல்

1 year ago
Sri Lanka
aivarree.com

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் எடுத்துரைத்துள்ளதாவது,

  • பொருளாதார சீர்திருத்தம் நிகழும்போது, மேன்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியான விடயம்.
  • இது தொடர்பில் அரசையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுகிறேன்.
  • எனினும் இந்த நலன்புரி கொடுப்பனவு பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
  • பதுளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்ட குடும்பங்களை வழமைபோல் ஒதுக்கி விடுவதை நாம் இம்முறை ஏற்க போவதில்லை.
  • நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா கணக்குக்காட்டி இம்மக்களை தவிர்க்கக் கூடாது.
  • அதேபோல் பெருந்தோட்ட பிரதேசத்தில் தோட்டங்களில் வேலை செய்யாதோரும் வாழ்கிறார்கள். அவர்களும் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினரே. அவர்களுக்கும் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வேண்டும்.
  • மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளைப் பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பமாக கருதப்படலாம்.
  • அப்படியானால் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழைக் குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வழி ஏற்படும் என்று கூறியுள்ளார்.