இலங்கை விமானப்படையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்சமயம் இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன எதிர்வரும் 30 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
இந் நிலையிலேயே நாட்டின் 19 ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ 1988 ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படையில் பொதுக்கடமை விமானியாக இணைந்துகொண்டார், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படைப் போர்ப் பயிற்சியையும், அனுராதபுர விமானப்படைத் தளத்தில் இல 1 விமான பயிற்ச்சி படைப்பிரிவில் அடிப்படைப் விமானி பயிற்சியையும் பெற்று, சிறப்பாகச் செயல்பட்டு, 33 ஆவது விமானக் கெடட் பாடநெறியில் சிறந்த கேடட் விமானியாக தெரிவுசெய்யப்பட்டார்.