டுனெடினில் நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்தைச் சேர்ந்த கிம் காட்டன் பிரதான ஆடுகள நடுவர்களில் (ஒன்-பீல்ட்) ஒருவராக செயல்பட்டுள்ளார்.
ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான இரண்டு முழு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச போட்டியில் ஒன்-பீல்ட் நடுவராக கடமையாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று பெருமையை கிம் காட்டன் (Kim Cotton) இதன் மூலம் பெற்றார்.
பெண்கள் கிரிக்கெட்டில் முன்னாள் வீராங்கனையான காட்டன், 2018 ஆம் ஆண்டு முதல் 54 மகளிர் டி:20 மற்றும் 24 மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒன்-பீல்ட் மற்றும் டிவி நடுவராக பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் பெப்ரவரியில் நடந்த மகளிர் டி:20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஒன்-பீல்ட் நடுவர்களில் ஒருவராக காட்டன் செயற்பட்டார்.
2021 ஜூன் மாதத்தில் சிட்னியில் நடந்த இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, அவுஸ்திரேலியாவின் கிளாரி போலோசாக் நான்காவது நடுவராக கடமையாற்றினார்.
ஆண்கள் டெஸ்டில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற பெருமையை இதன்மூலம் அவர் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.