இலங்கையில் ஜனவரி 2021 மற்றும் செப்டம்பர் 2022 க்கு இடைப்பட்ட 21 மாதங்களில் 35,042.8 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.
மாதம் சராசரியாக 1,669 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டு வந்ததன் விளைவாகவே உயர்ந்த பணவீக்கத்தை நாடு அனுபவித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்திடம் நிதி ஒழுக்கம் இல்லாததன் விளைவாக திறைசேரியின் கோரிக்கைக்கு இணங்க எவ்வித வரம்பும் இன்றி பணம் அச்சடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னாள் அரசாங்கத்தின் போது நிதி ஒழுக்கம் இல்லாததால் திறைசேரி உண்டியல்களை வழங்குவதன் மூலம் பணம் கேட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய வங்கிக்கு கடிதம் அனுப்புவதற்கு நிதி அமைச்சுக்கு அனுமதியளித்ததாக அவர் கூறினார்.