வவுனியா, நகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று, தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்துக்கு சென்ற இருவர், தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி, பாடசாலை காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இப் பகுதியில் குண்டுதாரிகள் இருவர் நடமாடுவதாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரிவித்ததையடுத்து, அதிபர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
எனினும் இது தொடர்பான தகவல்கள் எதனையும் தாங்கள் வழங்கவில்லை என்று வவுனியா பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறெனினும் அடையாளம் தெரியாத நபர்களினால் வழங்கப்பட்ட தகவல்கள் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்ததுடன், நகர பாடசாலைகளுக்கு முன்பாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கையிலும் இன்று ஈடுபட்டனர்.