கஜேந்திரகுமார் பொன்னம்பலம் துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்டார் (வீடியோ)

11 months ago
Sri Lanka
aivarree.com

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் அதிகாரிகள் என்று சொல்லப்படும் ஒருவரால் துப்பாக்கி காண்பித்து மிரட்டப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருந்தார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் உள்ள மருதங்கேணி விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திக்கச் சென்றிருந்த போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இரண்டு இளைஞர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரி ஒருவர் விசாரித்துள்ளார்.

இதன்போது குறித்த இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், மற்றைய இளைஞரை பொதுமக்கள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அருகில் இருந்த கட்டடத்தில் இருந்து சிவில் உடையில் வந்த இருவரில் ஒருவர் தம்மை பொலிஸ் என்று அடையாளப்படுத்தியதுடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரை விடுவிக்குமாறு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவரிடம் சம்பவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், குறித்த சந்தேகத்துக்கு இடமான நபரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.