எரிபொருள் விநியோகம் – அமைச்சரின் மாலை நேர அப்டேட்

1 year ago
Sri Lanka
aivarree.com

இன்று காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப் பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனையத்திலிருந்து மொத்தம் 1,086 பவுசர்கள் வழமையான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்துள்ளன.

குறித்த காலப் பகுதியில் 574 பவுசர்களூடாக 6,600 லிட்டர் லங்கா ஒட்டோ டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

512 பவுசர்களூடாக ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6,600 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் அவர், எரிபொருள் விநியோக சேவையில் ஈடுபட்ட அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் களஞ்சிய முனையத்தின் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


பின்னணி

கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் புதன்கிழமை (29) காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர காலையில் டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான எரிபொருள் விநியோக செயல்முறையானது இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் சில எரிபொருள் நிலையங்கள் முன்னதாக ஏப்ரலில் எரிபொருள் விலை குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பில் புதிய முன் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், எரிபொருள் விநியோகம் எவ்வித சிக்கல்களும் இன்றி தொடர்வதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்திருந்தார்.

அனைத்து ஊழியர்களும் புதன்கிழமை (29) காலை முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிய வேண்டாம் எனவும் வலியுறுத்தியிருந்தது.

மேலும், எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும், ஏனைய ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சீர்குலைக்கும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது ஊழியர்களுக்கு எதிராக தேவையான எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும், பணிநீக்கம் தொடர்பில் பரிசீலிக்க தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு CPC மற்றும் CPSTL தலைவர்களுக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கு அமைவாக எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது.

அந்த அறிவிப்புக்கு இணங்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை இன்று குறைத்திருந்தது.

இந்த விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணங்களும் நாளை (30) நள்ளிரவு முதல் 12.9 சதவீதத்தினால் குறைக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்திருந்தார்.

அதேநேரம் ஆரம்ப கட்டணத்தை 34 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக குறைப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந் நிலையில் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் கிலோ மீட்டாருக்கு 20 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்தது.

அதற்கிணங்க இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 80 ரூபாவாக மாற்றுவதற்கு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனையும் வழங்கியது.